தந்தை, மகன் கொலை வழக்கு.. காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி..!
தந்தை, மகன் கொலை வழக்கு.. காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ்; இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள், கொரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது.
இவர்களில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “இந்த வழக்கில், மதுரை நீதிமன்றத்தில் 105 சாட்சிகளில் 30 பேர் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர்.
நான் கடந்த 20 மாதங்களாக சிறையில் உள்ளேன். விசாரணை முடியும் வரை சிறையில் அடைத்து வைப்பது சட்ட விரோதம். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அப்போது, ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீதர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

