பைக் சாகசம் செய்த இளைஞர்களால் தூக்கி வீசப்பட்ட பெண் காவல் ஆய்வாளர்..!!
பைக் சாகசம் செய்த இளைஞர்களால் தூக்கி வீசப்பட்ட பெண் காவல் ஆய்வாளர்..!!

சென்னை வெளி வட்ட சாலைகளான ஈசிஆர் சாலை, ஓஎம்ஆர்சாலை, வண்டலூர் மற்றும் மீஞ்சர் சாலைகளில் கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் பலர் விதிகளை மீறி அடிக்கடி இதுபோன்ற பைக்ரேஸ் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து பைக் ரேஸ்களை தடுத்து நிறுத்தி கண்காணிக்கும் வகையில் குறிப்பிட்ட சாலைகளின் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கேமரா வீதம் பொருத்தப்பட்டன.

இவ்வளவு கட்டுப்பாட்டையும், கண்காணிப்பையும் மீறி இன்று காலை 9 மணியளவில் 3 இளைஞர்கள் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்டனர். மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இருசக்கர வாகனங்களில் 3 இளைஞர்களும் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது சாலையில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி என்பவர் இடதுபுறமாக ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் மீது நவீன் என்கிற இளைஞர் தன்னுடைய பைக்கால் பலமாக மோதினார். அதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் காயத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி நவீன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பைக்கில் பின்பக்கம் அமர்ந்து வந்த விஸ்வா என்கிற இளைஞருக்கு கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பைக் ரேசில் கலந்து கொண்ட மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

