முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்து !!
முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்து !!

தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவசர கால மருத்துவ தேவைகளுக்கு, இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்தில் கனிவ் 108 (கேரள ஆம்புலன்ஸ் நெட்வொர்க் - Kerala Ambulance Network for Injured Victims) என்ற பெயரில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தீபாமோல் இன்று பணியேற்றுக் கொண்டார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் குவிந்து வருகிறது. கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த தீபாமோல்-க்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், பெண்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு, ஆர்வமுடைய பெண்களை நியமிக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. பெண்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபட உதவும் நோக்கில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
தீபாமோல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுபோன்று அடுத்தடுத்து பல மாவட்டங்களிலும் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவார்கள், என அமைச்சர் கூறினார்.
கேரளாவின் முதல் பெண் அரசு ஆம்புலன்ஸ் ஒட்டுநராக பொறுப்பேற்றது குறித்து தீபாமோல் கூறுகையில், என்னுடைய கனவு நினைவேறியது. பெண்கள் சமையலறையில் மட்டும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் எந்த வேலையையும் தொடர முன்வர வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த தீபாமோல் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் ஆவார். அவர், 2009ஆம் ஆண்டில் கனரக வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றார். தனது இருசக்கர வாகனத்தில் கோட்டயத்திலிருந்து லடாக் வரை 16 நாட்களில் சென்று சாதனை படைத்துள்ளார். ஆஃப்-ரோட் டிரைவிங் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
newstm.in

