அரசுப் பள்ளி மாணவி தூக்கு மாட்டி தற்கொலை.. ஆங்கில ஆசிரியர் கைது..!
அரசுப் பள்ளி மாணவி தூக்கு மாட்டி தற்கொலை.. ஆங்கில ஆசிரியர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச் மாணவி ஒருவர், வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி, 11:30 மணியளவில் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் மாணவி வகுப்பில் இல்லாததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் மாணவியின் வீடு தெரியாததால் மாணவியை தேடி அலைந்துள்ளனர். இதையடுத்து, வீட்டில் சென்று பார்த்து வருமாறு அந்த மாணவியின் சகோதரனிடம், ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

சிறுவன் வந்து பார்த்தபோது மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு பயத்தில் அலறியுள்ளார். சிறுவனின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாநாடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆங்கில ஆசிரியர் கணேசன் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கணேசன் (31) என்பவரை பாப்பநாடு போலீசார் கைது செய்தனர்.
Next Story

