குட்கா முறைகேடு : முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு?
குட்கா முறைகேடு : முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு?

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிகோரி தமிழக அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் குட்கா வியாபாரியான தொழில் அதிபர் மாதவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் 3 பேர் உள்பட 6 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் 6 பேர் மீதும் முதல் கட்டமாக சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் சில அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தலைமைச் செயலாளர் இறையன்புக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசுத் தரப்பில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
newstm.in

