மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ்-க்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு !!
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ்-க்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு !!

சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயீத் உள்ளார். இந்தியா தேடும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவர் ஹபீஸ் சயீத். இந்தியாவுக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவரான ஹபீஸ், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாகக் கருதப்படுகிறார். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாகக் கூறி இரண்டு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹபீஸ் சயீத் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 32 வருட சிறை தண்டனையும் பாகிஸ்தான் மதிப்பில் ரூ.3.40 லட்சம் பணம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 70 வயதான ஹபீஸ் சயீத் ஏற்கனவே வேறொரு வழக்கில் 36 ஆண்டு கால சிறை தண்டனை பெற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் லாகூர் சிறையில் உள்ள ஹபீஸ் சயீத் தீர்ப்புக்காக நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். தற்போது வழங்கப்பட்ட சிறை தண்டனையுடன் சேர்த்த மொத்தம் 68 ஆண்டு காலம் ஹபீஸ் சயீத் சிறையில் கழிக்க வேண்டும்.
ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அவரது தலைக்கு அமெரிக்கா பத்து மில்லயன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்கிவருவதாக சர்வதேச நிதி அமைப்புகள் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளன. இதன் காரணமாக அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. மேலும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிரக்கட்சிகள் ஒன்று திரண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
இந்த சூழலில் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
newstm.in