ஜிப்மரில் ஹிந்தி கட்டாயம்.. மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
ஜிப்மரில் ஹிந்தி கட்டாயம்.. மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரி கோரிமேட்டில், மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியின் இயக்குநராக டாக்டர் ராகேஷ் அகர்வால் உள்ளார்.
சமீபத்தில் இவர், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றிலும் தலைப்புகள், பணிக்கால கணக்குள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவேண்டும்.
எதிர்காலத்தில் பதிவேடுகள் சேவை புத்தகங்கள், கணக்குள் அனைத்தும் முடிந்தவரை ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜிப்மர் இயக்குநரின் இந்த சுற்றறிக்கை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழை புறக்கணித்து ஹிந்தியை திணிக்க முயற்சி நடப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், ஜிப்மர் இயக்குநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஜிப்மர் ஆஸ்பத்திரியை முற்றுகையிடப் போவதாக புதுவை மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று காலை ஜிப்மர் எதிரே திமுகவினர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

