பிரக்ஞானந்தாவுக்கு கவுரவம்.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை..!
பிரக்ஞானந்தாவுக்கு கவுரவம்.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை..!

சென்னையில் பிறந்த பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டிகளில் 5 வயது முதல் அசத்தி வருகிறார். ஏழு வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தையும் வென்ற அவர் இளம் வயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோல், பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.
இந்த நிலையில், உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மொத்தம் 9 தொடர்களாக நடந்த இந்த போட்டியில் இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார்.
இதில், கடந்த 24-ம் தேதி நடைபெற்ற காலிறுதி சுற்றில், 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யி என்பவரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார்.
ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. தொடர்ந்து டை பிரேக்கரில் தோல்வியடைந்து பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்தார்.
இந்நிலையில், செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐஓசி) வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா, பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

