எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தல்..!
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தல்..!

திருச்சி, சமயபுரம் அருகே உள்ள மாடகுடி ஊராட்சியை சேர்ந்த பள்ளிவிடை எழில் நகரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அதை மாவாக அரைத்து வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின் படி மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன், மண்ணச்சநல்லூர் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த மில்லுக்கு சென்றனர்.
தொடர்ந்து, மில்லின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு ரேஷன் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அரவை இயந்திரத்தில் அரைத்த கோதுமை மற்றும் அரிசி மாவு தனியாக மூட்டையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் அதிகாரிகள் அந்த மில்லுக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் வருவதை அறிந்த மில்லின் உரிமையாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் இது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மாவு மில்லில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டை மூட்டையாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்..? எப்படி இந்த கிடங்கிற்கு இவ்வளவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன என்பது பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை அப்படியே கடத்தினால் மாட்டிக்கொள்வோம் எனக் கருதிய கடத்தல்காரர்கள், அவைகளை மாவாக அரைத்து விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

