கருணாநிதிக்கு அடுத்து நான்தான்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!
கருணாநிதிக்கு அடுத்து நான்தான்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள பிரம்மபுரத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்கள்தான் அதிகம். அந்த குடும்பங்களின் மேம்பாட்டுக்காகத்தான் திட்டங்களைக் கொண்டுவருகிறோம்.
நான்கைந்து முறை அமைச்சராக என்னைப் பார்த்திருக்கிறீர்கள். இப்போதும் அமைச்சராக பார்க்கிறீர்கள். இவ்வளவு பவர்ஃபுல் அமைச்சராக இருந்தும், எதையும் செய்யாவிட்டால் தொகுதி பின்னோக்கிப் போய்விடும்.
என் தொகுதியை என் வாழ்நாள் முழுவதும் கட்டிக் காப்பேன். நான் இருக்கிற வரை காட்பாடிக்கு நான்தான் எம்.எல்.ஏ-வாக இருப்பேன். தமிழ்நாடு சட்டசபையில் 234 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் 56 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் கலைஞர். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகளாக உறுப்பினராக இருப்பவன் நான்தான். என் வாழ்நாள் இருக்கிற வரை காட்பாடி தொகுதியில் நான்தான் நிற்பேன். நான்தான் ஜெயிப்பேன்.
1960 - 1961 காலகட்டத்தில் நான் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றபோது, டவுசர் அணிந்து சுற்றிக்கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் தோளுக்குமேல் வளர்ந்து, என் தலைக்குமேல் உயர்ந்து, தலைவராக வளர்ந்து நிற்கிறார்.
நான் அவர்மீது போட்ட கணக்கை தப்பு என நிரூபித்து உழைத்து வருகிறார். ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழகம் சுபிட்சமாக இருக்கப்போகிறது.

காட்பாடி தொகுதியில் 43 அரசுப் பள்ளிகளைக் கொண்டு வந்துள்ளேன். பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரியையும் கொண்டு வந்துள்ளேன்.
படித்த பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இங்கு 300 ஏக்கரில் இடம் தேர்வு செய்யும்படி கூறியுள்ளேன். அதில், தொழிற்பேட்டை தொடங்கப்படும்.
பாலாற்றில் தண்ணீரைத் தேக்கி வைக்க செக்டேம்கள் கட்டப்படும். இதுதவிர, பொன்னைப் பகுதியில் 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, வள்ளிமலைப் பகுதியில் கல்லூரியும் கொண்டுவரப்படும்.
காட்பாடி தொகுதியில் என்னால் எந்த அளவுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியுமோ, அனைத்தையும் செய்து முடிப்பேன்’’ என்றார்.

