11-ம் தேதி கூடும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!
11-ம் தேதி கூடும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம், உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. அவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூலை 11-ம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது. ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 4-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

