தேசிய தலைவருக்கான அடையாளம்.. அமித் ஷா புகழாரம்..!
தேசிய தலைவருக்கான அடையாளம்.. அமித் ஷா புகழாரம்..!

பிரதமர் மோடி குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை தொகுத்து, ‘மோடி அட் 20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற பெயரில், டில்லியைச் சேர்ந்த ரூபா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் புத்தகமாக வெளியிட உள்ளது.
இந்த புத்தகத்தில், அமித் ஷா எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: “நம் நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல்களில் பிரதமர்களும், கட்சிகளும் பெரும்பான்மை பலம் பெற்றதற்கு சுதந்திர போராட்டத்தில் அவர்களின் தொடர்பு, வாரிசு அரசியல் ஆகியவை முக்கிய காரணம்.
நாடு விடுதலை பெற்ற பின், சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்கை வைத்து தேசிய தலைவர்களாக பலர் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்பின், தேசிய தலைவர்களுக்கான அடையாளம் தவறாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், 2014ல் நடந்த லோக்சபா தேர்தல் தான் இதை மாற்றியமைத்தது. 30 ஆண்டுகளுக்கு பின், லோக்சபாவில் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சி என்ற சாதனையை பாஜக படைத்தது.
இதற்கு முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் வேட்பாளராக 2014 லோக்சபா தேர்தலுக்கு முன் பாஜக அறிவித்ததிலிருந்து தேசிய தலைவராக மோடி உருவெடுத்தார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக தேசிய தலைவர் என்பதற்கான அடையாளமாக மோடி விளங்கி வருகிறார்” என்று அதில் கூறியுள்ளார்.

