ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்.. அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை..!
ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்.. அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை..!

‘முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், “அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஏற்கனவே அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஆனால், பல நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் மீதான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
ஆனால், ‘அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, அதே முறைகேடு தொடர்பாக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தடையில்லை’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
அதன்படி, அரசு ஊழியர் செய்யும் முறைகேடு தொடர்பான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படலாம்.
குற்ற வழக்கில் கூறப்படும் தீர்ப்பு எந்த வகையிலும் துறை ரீதியான முடிவை பாதிக்காது. எனவே, தீர்ப்புக்காக காத்திருக்க தேவையில்லை.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் போது, அனைத்து ஆவணங்களையும் போலீசார் எடுத்துச் செல்வர். துறை ரீதியான நடவடிக்கைக்கு அந்த அசல் ஆவணங்களின் உண்மை நகலை வாங்கி நடவடிக்கையை தொடரலாம்.
ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆஜராகா விட்டாலோ, எழுத்துப்பூர்வமான அறிக்கை தராவிட்டாலோ, அரசு விதிகளுக்கு கீழ்படிய மறுத்தாலோ, ‘எக்ஸ்பார்ட்டி’ உத்தரவை விசாரணை அதிகாரி பிறப்பிக்கலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஊழியரை டிஸ்மிஸ் செய்வது போன்ற பெரிய முடிவை, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கலாம்.
குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்த ஊழியரை விசாரிக்க முடியாது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு, துறை விசாரணை முடிவை பாதிக்காது.
முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

