ஏ.வி.சாரதி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை !!
ஏ.வி.சாரதி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை !!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தொழிலதிபருக்கு சொந்தமான தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது.
ஆற்காடு பகுதியிலுள்ள பிரபல தொழிலதிபரும் முன்னாள் அதிமுக நிர்வாகியும், தற்போதைய திமுக பிரமுகருமான ஏ.வி.சாரதிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் திமிரி அடுத்த பாடி பகுதியில் உள்ள கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாதுகாப்பு காரணமாக சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் ஏ.வி.சாரதிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் என 28 இடங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்று வந்தது.
சுமார் 60 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரி சோதனை, குறிப்பாக ஆற்காடு சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையானது 4வது நாளான இன்று அதிகாலை நிறைவு பெற்றது.
சோதனைகள் முடித்துக் கொண்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். இருப்பினும் அவர்கள் சோதனை குறித்து எந்த ஒரு தகவல்களையும் கூறவில்லை. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

