இந்திய கிரிக்கெட்டின் சாதனை வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு.. உருக்கமான கடிதம் !
இந்திய கிரிக்கெட்டின் சாதனை வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வு.. உருக்கமான கடிதம் !

இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் உலகில் பெரும் சாதனைகளை படைத்த, சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தவர் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ். எத்தகைய சூழலையும் தனது பேட்டிங் ஆற்றலால் மாற்றக்கூடியவர் என பல போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர், வீராங்கனைகளையும் வியப்படையச் செய்தவர்.
தமிழர் மரபை சேர்ந்த மிதாலி ராஜ் கடந்த 1999, ஜூன் 26 அன்று, தனது 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அறிமுகமாக 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2000, 2005, 2009, 2013, 2017 மற்றும் 2022 என 6 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற சாதனையையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக 39 வயதான மிதாலி ராஜ் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள கடிதத்தில், இந்திய அணிக்கான சிறிய பெண்ணாக நீல நிற தொப்பியை அணிந்ததை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த பயணத்தில் நிறைய உயரங்களையும் சில சறுக்கல்களையும் சந்தித்துள்ளேன். இந்த 23 ஆண்டுகள் நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது.
மற்ற பயணங்களை போல் இந்த பயணமும் முடிவுக்கு வரவேண்டும். இன்று அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். ஒவ்வொருமுறை களத்தில் இறங்கும்போதும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளேன். தற்போது திறமையான இளம் வீராங்கனைகளின் கையில் இந்திய அணி உள்ள நிலையில் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரமாக இதை கருதுகிறேன், எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 7 சதம், 64 அரை சதம் ஆகியவற்றுடன் 7,805 ரன்கள் எடுத்துள்ளார், 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 699 ரன்களும் 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களும் எடுத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய பெருமையும், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையும் மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.