தாரை வார்த்தது இந்திரா.. கைதட்டி வரவேற்றது கருணாநிதி.. ஹெச்.ராஜா சாடல்..!
தாரை வார்த்தது இந்திரா.. கைதட்டி வரவேற்றது கருணாநிதி.. ஹெச்.ராஜா சாடல்..!

“கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி; அதை கைதட்டி வரவேற்றது கருணாநிதி. கச்சத்தீவை பற்றி பேச இந்தியாவில் தகுதி படைத்த ஒரே கட்சி பாஜக மட்டுமே” என்று ஹெச்.ராஜா கூறினார்.
பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“ஒன்பது மாதமாக கோவிலை சரி செய்யாமல் இருந்தது அறநிலையத்துறை அதிகாரிகளின் தவறு. அதை செய்யாமல் இருந்ததால் தான் பொதுமக்கள் கையில் எடுத்தனர். தவறு என்றால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியது தான்.
கார்த்தி கோபிநாத் வசூல் செய்த பணம் எந்த பயன்பாட்டிற்காக வசூல் செய்தாரோ, அந்த பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். கோவிலை புனரமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
மாரிதாஸ், கிஷோர் கே சுவாமி, கல்யாணராமன் வரிசையில் கார்த்தி கோபிநாத் கைது நடவடிக்கை. அதை வன்மையாக கண்டிக்கிறேன். 2 மாதத்தில் 5 லாக்கப் டெத் நடத்திய தமிழக காவல்துறை கொலைகாரர்கள் கார்த்திக் கோபிநாத்தை எங்கு வைத்துள்ளனர் என தெரியவில்லை.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு சினேக் பாபுவாக திகழ்கின்றார். மக்கள் போராட்டத்தின் மூலம் அறநிலையத் துறையில் இருந்து இந்துக் கோயில்கள் மீட்பதை தவிர இந்துகளுக்கு வேறு வழியில்லை.
இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் சேகர்பாபுவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதே திராவிட மாடல்.
ஜீ ஸ்கொயர் பற்றிய முழுமையான விசாரணை வேண்டும். முதலமைச்சர் என்பவர் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், அவரது குடும்பமே கொள்ளை அடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானம் வெற்றுக் காகிதம். அதனால் எந்த பயனும் இல்லை. நீட் தேர்வுக்கு தீர்வு கிடைக்க உச்சநீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.
பிரதமருக்கு முன் ஸ்டாலின் பேசியது எல்லாம் பித்தலாட்டம். கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி; அதை கைதட்டி வரவேற்றது கருணாநிதி. கச்சத்தீவை பற்றி பேச இந்தியாவில் தகுதி படைத்த ஒரே கட்சி பாஜக மட்டுமே” என்று ஹெச்.ராஜா கூறினார்.

