இளைஞர்களின் உயிரைப் பறித்தது இன்ஸ்டா மோகம்.. செங்கல்பட்டு அருகே சோகம்..!
இளைஞர்களின் உயிரைப் பறித்தது இன்ஸ்டா மோகம்.. செங்கல்பட்டு அருகே சோகம்..!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சுகுமார் என்பவருடைய மகன் அசோக்(24), குமார் என்பவருடைய மகன் மோகன்(17), ராமு என்பவருடைய மகன் பிரகாஷ்(17).
நண்பர்களான இவர்கள், இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது ரயில் பாதையில் அமர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் விரைவு ரயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது மோதியது. இதில் அசோக், மோகன், பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், மூன்று இளைஞர்களின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் வீடியோ மோகத்தால் ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் மோதிய விபத்தில் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

