சிஎஸ்கே பிளேஆஃப் தகுதி பெறாததுக்கு சுரேஷ் ரெய்னா தான் காரணமா?
சிஎஸ்கே பிளேஆஃப் தகுதி பெறாததுக்கு சுரேஷ் ரெய்னா தான் காரணமா?

2008 முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை இரு ஆண்டுகளில் மட்டுமே பிளே ஆஃப்க்குத் தகுதி பெறவில்லை. இந்த இரண்டு தொடர்களிலும் சிஎஸ்கே அணிக்கும் பிளே ஆஃப்க்கு செல்லாததுக்கு ஒரு காரணம் இருப்பதாக ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.
2020, 2022 என இந்த இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?. இந்த இரு வருடங்களிலும் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் விளையாடவில்லை என்பது தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இரு ஆண்டுகளிலும் சென்னை அணி பிளே ஆஃப்க்குத் தகுதி பெறவில்லை.

மற்றப்படி சுரேஷ் ரெய்னா விளையாடிய 11 ஆண்டுகளிலும் பிளேஆஃப்க்குத் தகுதி பெற்றுள்ளது சிஎஸ்கே. சுரேஷ் ரெய்னா அணியில் இருந்தபோது, நடுவரிசை வீரராக களமிறங்கி அணிக்குப் பெரிய பலமாக இருந்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 11 ஆண்டுகளிலும் 10 ஆண்டுகளில் 370+ ரன்கள் எடுத்துள்ளார். இதுவே அவரது ரன்ரேட்டை காட்டி அணிக்கான பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு தான் குறைந்துவிட்டது. 2021 ஐபிஎல் போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய ரெய்னா, 160 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2008 முதல் 2014 வரை எல்லா வருடங்களிலும் குறைந்தது தலா 400 ரன்கள் எடுத்தார்.

2020ஆம் ஆண்டு சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் ரெய்னா. அதுவும் அணி நிர்வாகத்துடன் மோதலா என ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பெற்றார் ரெய்னா. கோப்பையை வென்றது சிஎஸ்கே. ரெய்னாவை இந்த ஆண்டு ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கவில்லை. மீண்டும் பிளேஆஃப்க்கு சிஎஸ்கே தகுதி பெறவில்லை. நடுவில் இரு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால் போட்டியில் பங்கேற்கவில்லை.
newstm.in

