நகைக் கடன் தள்ளுபடி.. அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன முக்கிய தகவல்..!
நகைக் கடன் தள்ளுபடி.. அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன முக்கிய தகவல்..!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (2ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதிப் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த பட்டியல் வெளியிடப்பட்டவுடன், பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் அவை ஒட்டப்படும்.
மேலும், 2021 ஜனவரி 31-ம் தேதி வரை உள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகைக் கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பட்சத்தில், ஆய்வு செய்து அவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்” எனக் கூறினார்.

