1 மணி நேரத்தில் மதுரை டூ சென்னை வந்த கல்லீரல்.. சாதித்த அரசு மருத்துவர்கள் !
1 மணி நேரத்தில் மதுரை டூ சென்னை வந்த கல்லீரல்.. சாதித்த அரசு மருத்துவர்கள் !

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 வயது நோயாளிக்கு கல்லீரல் பிரச்சனை இருந்துவந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு பொருந்தும் வகையிலான கல்லீரல் கிடைக்கவில்லை. இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 39 வயது நபர், கடந்த 10ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.
இந்த தகவலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மதுரை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவக் குழுவுடன் இணைந்து மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஒரு மணி நேரத்தில் அவரது கல்லீரல் கொண்டுவரப்பட்டது. பின்னர் சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு வரப்பட்டது.

கல்லீரல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் ஜஸ்வந்த் தலைமையில், மயக்க மருந்து துறை பேராசிரியர் மாலா, கல்லீரல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு தலைவர் ரேவதி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 12 மணி நேரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் வெற்றியும் கண்டனர்.
இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி கூறுகையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறையில், 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை 81 பேருக்கு உடல் உறுப்பு தானம் பெற்று, மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். இது அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி என்றார்.
அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

