ஆப்கனில் பெண்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஆண் செய்தியாளர்கள் !!
ஆப்கனில் பெண்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஆண் செய்தியாளர்கள் !!

ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான் அரசின் உத்தரவுக்கு ஆண் பத்திரிகையாளர்கள் நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசு அறிவித்துள்ளது.
தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உள்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் ஆப்கானில் எதிர்ப்பை மீறி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை முகத்தை மறைத்து திரையில் தோன்றும்படி அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் மஹிரா கூறும்போது, கடந்த சனிக்கிழமை எனக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது. நான் புர்கா அணிந்திருந்தபோது என்னை நான் மனித இனமாகவே உணரவில்லை. நாங்கள் உயிருடன் புதைக்கப்பட்டதைப் போன்ற உணர்வை அவர்கள் ஏற்படுத்தினார்கள். நான் மிகப் பெரிய தவறு செய்திருக்கிறேன் அதனால்தான் இறைவன் என்னை ஆப்கான் பெண்ணாக பிறக்கச் செய்துள்ளார். எந்தச் சட்டத்தில் சொல்கிறது, டிவியில் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என. அரபு நாடுகளில் கூட பெண்கள் தங்கள் முகத்தை மூடுவது இல்லை, என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்களும் முகத்தை மூடி தொலைக்காட்சிகளில் தோன்றினர். முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மறைத்தப்படி தொலைக்காட்சிகள் தோன்றி தொகுத்து வழங்கினர்.
newstm.in