பாஜக ஆட்சிக்கு வரவே வராது.. அடித்துச் சொல்கிறார் மம்தா..!
பாஜக ஆட்சிக்கு வரவே வராது.. அடித்துச் சொல்கிறார் மம்தா..!

மேற்கு வங்க மாநிலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ள பார்த்தா சாட்டர்ஜி, கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை அமைச்சராக செயல்பட்ட போது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க சிபிஐக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள அமைச்சர் பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 23-ம் தேதி மாலை கைது செய்தனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசும்போது, “அவர்களுக்கு (பாஜக) வேலையே கிடையாது. 3 முதல் 4 அமைப்புகளை வைத்து கொண்டு மாநில அரசுகளை தங்கள் வசம் எடுத்துக் கொள்வதே அவர்களது வேலை.
அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை எடுத்து கொண்டார்கள். தற்போது ஜார்க்கண்ட் மாநிலம். ஆனால், வங்கம் அவர்களை தோற்கடித்து விட்டது. வங்கம் உங்களுக்கு வசப்படுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு முதலில் நீங்கள், ராயல் வங்காள புலியுடன் மோத வேண்டும்.
2024-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரவே வராது என்பது எனது நம்பிக்கை. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 40% அதிகரித்து உள்ளது. ஆனால், வங்கத்தில் அது 45% குறைந்துள்ளது.
தற்போது, ஊடகங்கள் வழியே ஒருவரின் மதிப்பை சீர்குலைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. மக்களை குற்றவாளிகள் எனக் கூறி வருகின்றனர். வங்கம் மோசமடைந்து உள்ளது என்ற தோற்றத்தினை ஏற்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.