மே தினம்.. விடுமுறை அளிக்காத 303 நிறுவனங்கள் மீது நடவடிக்கை !!
மே தினம்.. விடுமுறை அளிக்காத 303 நிறுவனங்கள் மீது நடவடிக்கை !!

மே தினம் விடுமுறை அளிக்காத 303 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
உழைப்பாளர்கள் தினமான மே தினம் உலகம் முழுவதும் மே 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்நாளில் பல்வேறு நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் . அன்றைய தினத்தில் வேலை செய்தால், வேறு ஒரு தினத்தில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டல எல்லைக்குள்பட்ட மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர்கள் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மூலம் மே தின விடுமுறை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மதுரை உள்பட 4 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் போது இந்த சட்ட விதிகளுக்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 156 கடைகள், நிறுவனங்கள், 134 உணவு நிறுவனங்கள், 13 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 303 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மே தினத்தில் வேலை அளிப்பவர்கள் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுமுறை அளித்துள்ளார்களா என்பதை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் உறுதி செய்யப்படும், என்று தெரிவித்துள்ளார்.
newstm.in

