அலுமினிய குண்டானை காட்டி பல லட்ச ரூபாய் மோசடி!!
அலுமினிய குண்டானை காட்டி பல லட்ச ரூபாய் மோசடி!!

இரிடியம் இருப்பதாக கூறி அலுமினிய குண்டானை காட்டி பல லட்ச ரூபாய் ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த ஜாகிர் என்பவர் தாம்பரத்தில் பணி செய்து கொண்டிருந்த போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜன் என்பவர் மூலம் இந்த தொடர்பு ஏற்பட்ட நிலையில் உலகநாதன் தன்னிடம் இரிடியம் இருப்பதாக கூறியுள்ளார்.
அதை விற்றால் பல லட்ச ரூபாய் பணம் கிடைக்கும் என தெரிவித்து ஒன்றரை லட்ச ரூபாய் முன்பணமாக பெற்று மீதம் 3 லட்ச ரூபாய் இரிடியம் கொடுக்கும்போது கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு உலகநாதன் நெய்வேலியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டிற்கு ஜாகிரை அழைத்து வந்து அங்குள்ள ஒரு பொருளை காட்டி இரிடியம் என கூறியுள்ளார்.

அந்த தொட்ட போது ஷாக் அடித்து உள்ளது. இது பவர்ஃபுல் இரிடியம் என்பதால் உடனடியாக பணத்தை கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் என்று உலகநாதன் கூறியுள்ளார். ஆனால் ஜாகிர் தான் பணம் எடுத்து வரவில்லை என தெரிவித்தார்.
வங்கி கணக்கில் பணம் உள்ளதாகவும் அதனை எடுத்து வருவதாக கூறியுள்ளார் பணம் எடுக்காமல் இருடியத்தை தொட்டாய் எனக்கூறி பாலசுப்பிரமணியம் உலகநாதன் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து ஜாகீர் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசார் உடனடியாக நெய்வேலி சென்று அங்கு இருந்த உலகநாதன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரை பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த அந்த பாத்திரத்தை சோதனை செய்தபோது அலுமினிய பாத்திரத்தின் மேல் அலுமினிய ஃபாயில் பேப்பர் சுற்றி அதனுள் பேட்டரி வைத்து அதில் மின்சாரம் பாய்ச்சி உள்ளனர்.
அதனை தொட்டால் ஷாக் அடிக்கும் விதமாக செய்துள்ள நிலையில் இதனை பார்த்து தான் ஜாகீர் ஏமாந்து உள்ளார் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மற்றொரு குற்றவாளியான ராஜன் சென்னை தாம்பரத்தில் கைது செய்யப்பட்டு அவரும் முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தமிழகத்தில் இரிடியம் மோசடி தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

