இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!!
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில், மக்களவை பா.ஜ.க. துணைத்தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், மாநிலங்களவை பா.ஜ.க. தலைவரும், மத்திய தொழில், வர்த்தக அமைச்சருமான பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

அதே போல் அனைத்துக் கட்சி தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எல்லா பிரச்னைகளையும் விவாதிப்பதற்கு அரசு திறந்த மனதுடன் இருக்கிறது என்றார்.
விலைவாசி உயர்வு, அக்னிபத் திட்டம், நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம், சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 13 பிரச்னைகளை எழுப்பிதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

மேலும் கூட்டத்திற்கு பிரதமர் மோடி வராதது குறித்தும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பிரகலாத் ஜோஷி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் எத்தனை முறை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வந்தார் என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தகாத வார்த்தைகள் என பட்டியலிட்டு இருப்பது வழக்கமான நடைமுறைதான். சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும்தான் எது தகாத வார்த்தை என்பதை தீர்மானிக்கிற உரிமையைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
newstm.in

