சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பொறுப்பேற்பு..!
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பொறுப்பேற்பு..!

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முடிவு செய்தது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் குழுவின் கூட்டம் கடந்த டிசம்பர் 14 மற்றும் ஜனவரி 29-ம் தேதி நடைபெற்றது.
அதன்பின் இது குறித்த பரிந்துரையை மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, பொறுப்பு நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

இதற்கான பதவியேற்பு விழா இன்று (14ம் தேதி) சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

