முனியாண்டி கோயில் விழா.. 470 ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து! !!
முனியாண்டி கோயில் விழா.. 470 ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து! !!

மதுரை திருப்பரங்குன்றம் விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள வெள்ளக்கல் கிராமத்தில் உள்ளது கழுங்கடி முனியாண்டி சாமி கோயில். இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா அப்பகுதியில் பெரும் பிரபலமானது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டி சாமிக்கு ஆடுகளை பலியிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான முனியாண்டி கோயில் 35ஆவது ஆண்டு திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய 470 ஆட்டுக் கிடாய்களுடன் பொங்கபானை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. பின்னர் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முனியான்டி கோயில் முன்பு ஆட்டு கிடாய்கள் இரவு முழுவதும் வெட்டப்பட்டது.

இதனையடுத்து பலியிட்ட ஆடுகளை உணவு சமைத்து காலை முதல் இரவு வரை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கறிவிருந்தும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில், பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியபட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா காலகட்டத்தின் போது கூட வெள்ளக்கல் பகுதிகளில் ஒருவருக்கு கூட கொரோனா வந்தது இல்லை என்றும், கோயிலில் முதல் முதலாக எங்கள் பிரச்சனை தீர ஒரு ஆட்டுக்கிடா வெட்டி ஆரம்பிக்கப்பட்ட கோயில் திருவிழா, தற்போது 470-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது.
newstm.in

