நீட் கொடூரம்: மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றகூறுவதா? - விசாரணைக்கு உத்தரவு !!
நீட் கொடூரம்: மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றகூறுவதா? - விசாரணைக்கு உத்தரவு !!

நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடைகளை கழற்ற அதிகாரிகள் வற்புறுத்தியதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. அந்த வகையில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரில், தன் மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளாவின் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
அங்கு தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியே பரிசோதித்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்ததில், மாணவிகளின் உள்ளாடைகளில் காணப்படும் "கொக்கி" கண்டறியப்பட்டதாக எனது மகளிடம் கூறப்பட்டது. உடனே கொக்கிகளை அகற்றும்படி கூறப்பட்டது. இல்லாவிட்டால் உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
நீட் தேர்வு மைய ஊழியர்கள் மாணவிகளிடம், இதை விட முக்கியமானது என்ன? உங்கள் எதிர்காலம் முக்கியமா அல்லது உள்ளாடைகளா? என்று மிரட்டும் தொனியில் பேசினர். இதன்காரணமாக, தேர்வெழுத வந்திருந்ததில் ஏறக்குறைய 90 சதவீத மாணவிகள் தங்கள் உள்ளாடைகளை கழற்றி ஒரு அறையில் வைக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை உருவானது.
மேலும், உள்ளாடையின்றி பெண்கள் தேர்வெழுதும்போது, அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவிகள் பெரும் மனஉளைச்சலில் தேர்வை எதிர்கொண்டனர். இதனால் அவர்களால் எளிதாக தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை என அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனினும், கேரளாவின் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் உள்ள மையம் இந்த புகாரை மறுத்துள்ளது. புகாரை பெற்றுக்கொண்ட பின், அவரது மகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள போலீசார், அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்றனர். கொல்லத்தில் வெடித்த சர்ச்சை குறித்து உரிய விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கொல்லம் எஸ்.பி.க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in