தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்..!
தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும், அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் கடந்த 17-ம் தேதி அறிவித்தது.
இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்படி, கடந்த 18-ம் தேதி மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.
இதையடுத்து, ‘அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்..?’ என்று, 987 தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில், தனியார் பள்ளிகள் அனுமதியின்றி விடுமுறை அறிவித்த விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
18-ம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படும் என்று பள்ளிகள் விளக்கம் அளித்துள்ளதாக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

