இனி வீண் அலைச்சல் இல்லை.. கிராமங்களில் விரைவு தபால் சேவை அறிமுகம்..!
இனி வீண் அலைச்சல் இல்லை.. கிராமங்களில் விரைவு தபால் சேவை அறிமுகம்..!

கடலூர் மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் என 2 அஞ்சலக கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்கள், 85 துணை தபால் நிலையங்கள், 383 கிராமப்புற கிளை தபால் நிலையங்கள் என மொத்தம் 471 தபால் நிலையங்கள் உள்ளன.
இதில், தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில் மட்டுமே விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. நாடு முழுதும் கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவை பதிவு நடைமுறை இல்லாமல் இருந்தது.
இதனால், கிராமப்புற மக்கள் அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், துணை தபால் நிலையங்களுக்கும் சென்று தான் விரைவு தபால் சேவை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் வீண் அலைச்சலும், கால விரையமும் ஏற்பட்டது.
இந்நிலையில், கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யும் நடைமுறையை இந்திய அஞ்சல் துறை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் 383 கிராமப்புற கிளை தபால் நிலையங்கள் இயங்கி வருகிறது. இங்கு, விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, தபால்காரர்களுக்கு கையடக்க கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் விரைவு தபால் சேவைக்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து தபால்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, கிராமப்புற மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராமப்புற தபால் நிலையங்களில் நேரடியாக சென்று விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யலாம். அத்துடன், தபால்காரர்களை மொபைலில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்தும் பதிவு செய்து கொள்ளலாம்’ என்றார்.

