இனி, திருதிருவென முழிக்க வேண்டாம்.. பயணிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம்..!
இனி, திருதிருவென முழிக்க வேண்டாம்.. பயணிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம்..!

இந்தியாவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும் ஒன்று. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி இங்கு ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
இதன் மூலம், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பயணிகள் பலருக்கு வெளியே எந்த வழியாக செல்ல வேண்டும், விமானம் ஏற எந்த வழியாக செல்ல வேண்டும், குடிநீர், கழிவறை, சரக்கு வைக்கும் இடம் எங்கே உள்ளது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.
ஆங்காங்கே தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், சில பயணிகள் குழப்பம் அடைகின்றனர். இதையடுத்து, பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் அந்த விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி கூறுகையில், ‘பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில், பரிசோதனை அடிப்படையில் 10 ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
பயணிகள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அந்த ரோபோக்களிடம் கேட்டால் அவை பதிலளிக்கும். இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த பணியில் ரோபோக்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம்’ என்றார்.

