குடிநீரில் கலந்தா ஓஎன்ஜிசி எரிவாயு எண்ணெய்..?: கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம்..!
குடிநீரில் கலந்தா ஓஎன்ஜிசி எரிவாயு எண்ணெய்..?: கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம்..!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் பகுதியில் ஓ.என்.ஜி.சி எரிவாயு எண்ணெய் சேகரிப்பு மையம் உள்ளது.
இந்த மையத்தின் எதிரில் உள்ள ராமாமிருதம் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை அப்பகுதி மக்கள் குடித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் (32), இளந்தமிழ் (25), லோகேஷ் (6), ஷிவானி (2) உட்பட 10-க்கு மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், மிகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் லோகேஷ் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றிய தகவல் வேகமாக பரவியதால் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த குத்தாலம் தாசில்தார் பிரான்சுவா, இன்ஸ்பெக்டர் வள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஆணையர் சுமதி உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர். மேலும், கிராம மக்களுக்கு திடீரென வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டதற்கு ஓ.என்.ஜி.சி எரிவாயு எண்ணெய் கலந்த குடிநீர் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

