உண்மைகளை வெளியிட்டால் ஓபிஎஸ் வெளியே வரமுடியாது.. ஆர்.பி.உதயகுமார் காட்டம் !!
உண்மைகளை வெளியிட்டால் ஓபிஎஸ் வெளியே வரமுடியாது.. ஆர்.பி.உதயகுமார் காட்டம் !!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்து கலவரமே உண்டானது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நாங்கள் தான் உண்மையான அதிமுக என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும் இருவரும் மாறி மாறி எதிர்தரப்பு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.
இதனால் பெரும் குழப்பதில் இருப்பது தொண்டர்கள் தான். அதேநேரத்தில் இரு தரப்பு நிர்வாகிகளுடம் தற்போது ஒருமையில் வார்த்தை மோதலில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரை அரசு சட்டக்கல்லூரியில் நான் பயின்றபோது ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன். இது ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்ற போது எனக்கு மாணவர் அணிச் செயலாளர் பதவி வழங்கினார்.

தொடர்ந்து இந்த இயக்கத்தின் 50 ஆண்டுகால விழா வரலாற்றில் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு மாணவரணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், பேரவை செயலாளர் என்று 3 அணிகளுக்கும் சிறப்பாக பணியாற்றிய அ.தி.மு.க. தொண்டன் என்ற பெருமையை எனக்கு தந்தவர் ஜெயலலிதா.
நான் தூய தொண்டாக இருந்து உழைத்து வருகிறேன். ஓ.பி.எஸ்.யின் வரலாறும், என் வரலாறும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம். திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் நான் தயாராக உள்ளேன்.

ஓ.பி.எஸ். வீட்டிலும், எனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஓழிப்பு துறை ஓரே நேரத்தில் சோதனை நடத்தி எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன். அவர் சொத்து குவித்ததாக அறிந்தால் ஓ.பி.எஸ். பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? நான் கட்சி நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன்.
என்னை மிரட்டி பார்க்கும் ஓ.பி.எஸ். குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும், என அவர் கூறினார். இது போன்ற பேச்சுசள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

