போலீஸ் பாதுகாப்பில் ஓபிஎஸ்.. அசம்பாவிதம் தடுக்க நடவடிக்கை..!
போலீஸ் பாதுகாப்பில் ஓபிஎஸ்.. அசம்பாவிதம் தடுக்க நடவடிக்கை..!

அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களிடையே நேற்று வன்முறை வெடித்தது. இதனால் அந்த இடம் போர்க்களம் போலக் காட்சியளித்தது.
மேலும் இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் கலவரம் ஏற்படாதவாறு அதிமுக அலுவலகம் மற்றும் அதிமுக பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தை அடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
நேற்று 35க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், இன்று காலை முதல் கூடுதலாக 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு சிறப்பு பாதுகாப்புப் படையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

