ஓபிஎஸ் மகன் எம்பி கிடையாது.. எடப்பாடி பழனிசாமி கடிதம்..!
ஓபிஎஸ் மகன் எம்பி கிடையாது.. எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைமை அலுவலகத்தையும் சட்டப் போராட்டத்தின் மூலமாக பழனிசாமி கைப்பற்றியுள்ளார்.
இதற்கிடையே, கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான விவரங்களை மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘கட்சியில் இருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டிருப்பதால், மக்களவையில் அவருக்கு அதிமுக எம்பி என்ற அங்கீகாரத்தை கொடுக்க வேண்டாம்’ எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பரிசீலனையில் உள்ள அந்த கடிதத்தை மக்களவை தலைவர் ஏற்கும் பட்சத்தில், ரவீந்திரநாத் அதிமுக எம்பி என்ற அந்தஸ்தை இழந்து, கட்சி சாராத எம்பி ஆகிவிடுவார்.
இதன் மூலம், முக்கிய விவாதங்களின் போது அவருக்கு பேசுவதற்கு முக்கியத்துவமும், போதுமான நேரமும் வழங்கப்படாது என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

