‘ஒரு ரூபாய் மருத்துவர்’ காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்..!!
‘ஒரு ரூபாய் மருத்துவர்’ காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்..!!

மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் உள்ள போல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஷோவன் (83). இவர் 60 ஆண்டு காலமாக ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஒரு ரூபாய் மருத்துவர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுஷோவன், காங்கிரஸ் சார்பில் போல்பூரில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் உருவான பிறகு, பிர்பூமில் அக்கட்சியின் முதல் மாவட்டத் தலைவராக இருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், அதே ஆண்டில் அதிகபட்ச நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார் சுஷோவன்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு வந்த சுஷோவன், 20 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள நார்த் சிட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் காலமானார்.
ஒரு ரூபாய் மருத்துவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவர் சுஷோவன் பானர்ஜி மனித ஆத்மாவின் சிறந்த உருவகத்தை வெளிப்படுத்தினார். அவர் பலரைக் குணப்படுத்திய அன்பான மற்றும் பெரிய இதயமுள்ள நபராக நினைவுகூரப்படுவார். பத்ம விருது வழங்கும் விழாவில் அவருடன் நான் உரையாடியதை நினைவு கூர்கிறேன். அவரது மறைவு வேதனை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Dr. Sushovan Bandyopadhyay epitomised the best of human spirit. He will be remembered as a kind and large hearted person who cured many people. I recall my interaction with him at the Padma Awards ceremony. Pained by his demise. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/Ms73RrYdfa
— Narendra Modi (@narendramodi) July 26, 2022
சுஷோவன் மறைவு குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவர் சுஷோவன் அவர்களின் மறைவு குறித்து அறிந்து வருத்தமாக உள்ளது. பீர்பூமின் புகழ்பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர், பொதுநலம் கொண்ட உதவும் குணத்துக்கு பெயர் பெற்றவர்” என்று தெரிவித்துள்ளார்.
Sad to know of the demise of benevolent doctor Sushovan Bandyopadhyay. The famed one-rupee-doctor of Birbhum was known for his public-spirited philanthropy, and I express my sincerest condolences.
— Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2022