பொறியியல் தேர்வில் 38 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி- அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி !!
பொறியியல் தேர்வில் 38 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி- அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி !!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் தேர்வில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா ஊரங்கிற்குப் பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆன்லைனில் படித்தும், ஆன்லைனிலேயே தேர்வுகளையும் எழுதியும் வந்தனர். இதனால் மாணவர்களின் கல்வித்திறன் குறைந்து வருவதாக பல்வேறு தரபினரும் கூறி வந்தனர்.

இதனையடுத்து மாணவர்கள் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், பருவத் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்தது. அப்போது தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை பரவி வந்ததால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2021 நவம்பர் - டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில், அதில் 62 சதவீதம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பொறியியல் படிப்பில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த முறை எழுத்துத்தேர்வை எதிர்கொள்ள முடியாததே இவ்வளவு பேர் தோல்வியடைய காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
newstm.in

