பழனி கோவிலில் பரபரப்பு.. காணிக்கையில் கைவரிசை காட்டிய பெண் கைது..!
பழனி கோவிலில் பரபரப்பு.. காணிக்கையில் கைவரிசை காட்டிய பெண் கைது..!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியதும் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த புதன்கிழமை பழனி கோவில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.
அப்போது, பழனி கோவிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் பணிபுரியும் பாக்கிய லட்சுமி (44) என்ற ஊழியர் ஒருவர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர், காலில் ரப்பர் பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவில் தங்க நகையை நூதனமாக திருடி உள்ளனர். இதை, காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாக்கியலட்சுமியை கோவில் ஊழியர்கள் சோதனையிட்டபோது, காலில் நகையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அடிவாரம் காவல் நிலையத்தில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், பாக்கியலட்சுமியை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

