மக்களே, உங்க வீட்டுச் செலவு எவ்வளவு..?: ஆகஸ்ட் மாதம் கணக்கெடுக்குது அரசு..!
மக்களே, உங்க வீட்டுச் செலவு எவ்வளவு..?: ஆகஸ்ட் மாதம் கணக்கெடுக்குது அரசு..!

தேசிய புள்ளியியல் துறை சார்பில், சமூக பொருளாதார கணக்கெடுப்பின் கீழ், வீடுகளில் செய்யப்படும் செலவுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் ஈடுபட உள்ள களப் பணியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது.
களப்பணியாளர்கள், ஒரு பகுதியில் குறிப்பிட்ட வீடுகளை மட்டும் தேர்வு செய்வர். அங்கு வசிப்போரின் பெயர், கல்வித் தகுதி உள்ளிட்ட அடிப்படை கேள்விகளுடன், அவர்கள் செய்யும் செலவுகள் குறித்த முழுமையான விவரங்களை திரட்டுவர்.
உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கேள்விகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் கீழ் கிடைக்கும் பதில்களின் அடிப்படையில், 30 நாட்களில் வீடுகளில் செய்த செலவுகளில் இருந்து, ஓராண்டு வரையிலான செலவுகள் குறித்த அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும்.
இதன் மூலம், அந்தப் பகுதி மக்களின் தோராயமான செலவுகள் குறித்த விவரங்கள், தரவுகளாக மாற்றப்படும். இதனுடன், மற்ற பகுதி மக்களின் செலவினங்களில் உள்ள வேறுபாடுகள் கணக்கிடப்படும்.
இந்தக் கணக்கெடுப்பு, தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி, 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, தேசிய புள்ளியியல் துறை துணை இயக்குநர் காஞ்சனா கோஷ் பேசியதாவது: இந்தக் கணக்கெடுப்பு, அரசின் கொள்கை முடிவுக்கு மிகவும் அத்தியாவசியமானது.
எனவே, அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் நலன் கருதி, மக்களும் பணியாளர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தேசிய புள்ளியியல் துறையின் தமிழக வடக்கு மண்டல துணை இயக்குனர் சுபா, முதுநிலை புள்ளியியல் அதிகாரி மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.