மக்களே கவனம்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு..!
மக்களே கவனம்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு..!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐஐடி-யில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. முகக்கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், நமக்கும் டெல்லியின் நிலைதான் ஏற்படும்.
டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. தற்போதைய தொற்று அதிகரிப்பை கொரோனா 4-ம் அலையின் தொடக்கம் எனக் கூற முடியாது.
பல இடங்களில் சானிடைசர் வழங்குவது நிறுத்தப்பட்டு இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. முகக்கவசம் அணிய தேவையில்லை என சில மாநிலங்கள் கூறினாலும் தமிழக அரசு கூறவில்லை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கவனக் குறைவு ஆகியவையே தொற்று பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

