கடத்தப்பட்ட தொழிலதிபரை 6 மணி நேரத்தில் மீட்ட போலீஸார்!!
கடத்தப்பட்ட தொழிலதிபரை 6 மணி நேரத்தில் மீட்ட போலீஸார்!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்தனர்.
கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சந்திரசேகரன்(67) என்பவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்ததாரராகவும் அப்பகுதியில் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, 5 பேர் கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து அவரது மகன் மணிகண்டன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் மணிகண்டனை தொடர்ந்து கொண்ட மர்ம நபர்கள் 70 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்து அவர் காவல்துறைக்கு தெரிவித்தார்.

போலீஸார் செல்போன் எண்களை கண்காணித்து அதன் அடிப்படையில் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை அறிந்த அவர்கள் கடத்தப்பட்ட சந்திரசேகரனை காரில் வைத்துக் கொண்டு சுற்றி திரிந்தனர். பின்னர் சந்திரசேகரனை சூரியூர் சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

சந்திர சேகரனை மீட்ட போலீஸார் அதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து கீரனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்திற்காக கடத்தினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
newstm.in

