ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் 3வது நாளாக தொடரும் ரெய்டு!!
ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் 3வது நாளாக தொடரும் ரெய்டு!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்களில் வருமான வரித்துறையினர் 3வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் சென்னையில் கடந்த 2000-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ பரிசோதனைகளை முதன்மைப்படுத்தி இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கந்தசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னையில் உள்ள வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களின் கிளைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த திடீர் சோதனை, தமிழ்நாடு முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று நடைபெற்றது. மேலும், ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை பகுதிகளை சேர்ந்த சுமார் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்,கடந்த 7-ந்தேதி காலை இந்த நிறுவனத்தின் தொடர்புடைய 25 இடங்களில் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முதல் நாள் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக இன்றும் சோதனை நடைபெறுகிறது. அதன்படி கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையம், உரிமையாளர் கோவிந்தராஜின் வீடு, திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது.
தற்போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம், ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு என்பது கூற இயலாது. வருமானவரி சோதனை முற்றிலும் நிறைவடைந்தவுடன்தான் பறிமுதல் செய்யப்பட்ட, சொத்துக்களின் ஆவணங்கள் மற்றும் ரொக்க நிலவரங்கள் தெரியவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டாட்டா கேப்பிட்டல் குரூப் ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

