ரூ.1 கோடி கட்டணம்.. 26 மணிநேர பயணம்.. ஏர் ஆம்புலன்ஸ்சில் சென்னை வந்த மூதாட்டி..!
ரூ.1 கோடி கட்டணம்.. 26 மணிநேர பயணம்.. ஏர் ஆம்புலன்ஸ்சில் சென்னை வந்த மூதாட்டி..!

கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர், அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்ட் ஒரிகான் நகரில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் தனது பிள்ளைகளுடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில், இதய நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அந்த மூதாட்டிக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்த அவருடைய மகன்கள், பெங்களூருவில் உள்ள தனியார் ஏர்-ஆம்புலன்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர்.
இதற்காக, துருக்கியில் இருந்து அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதிக்கு ஏர்-ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பப்பட்டது. பின்னர், போர்ட்லேண்ட் வந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்தில் அந்த மூதாட்டி மருத்துவக்குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த விமானம், போர்ட்லேண்டில் இருந்து ஐஸ்லாந்து சென்று, துருக்கி வந்தது. பின்னர், துருக்கியில் இருந்து மருத்துவக் குழுவினருடன் சென்னை வந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக நீண்ட தூரம் (26 மணி நேரம்) பயணம் செய்த முதல் ஏர்-ஆம்புலன்ஸ் விமானம் இதுவே ஆகும். இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு மட்டும் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் செலவு ஆனதாக கூறப்படுகிறது.

