மனைவி சம்பாதித்த ரூ.1.20 கோடி.. கள்ளக் காதலிக்கு வாரி வழங்கிய ‘வள்ளல்’ கைது..!
மனைவி சம்பாதித்த ரூ.1.20 கோடி.. கள்ளக் காதலிக்கு வாரி வழங்கிய ‘வள்ளல்’ கைது..!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சிஜு கே ஜோஸ் (52). இவருடைய மனைவி அமெரிக்காவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்க வங்கியில் இருவர் பெயரிலும் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கில் ஜோஸ் மனைவி தனது சம்பள பணத்தை டெபாசிட் செய்வது வழக்கம்.
இந்நிலையில், வங்கியில் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து 1.20 கோடி ரூபாய் மாயமானத்தை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, ஆலப்புழா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் ஜோஸ் மனைவியின் கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது, காயம்குளம் புதுப்பள்ளி கோவிந்தமுட்டம் பாசுர பவனைச் சேர்ந்த பிரியங்கா (30) என்ற பெண்ணின் கணக்கிற்கு 1.20 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜோசிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் அளித்தார்.

மனைவி வெளிநாடு சென்ற பின்னர் ஜோசும் பிரியங்காவும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனால் அவருடன் ஜாலியாக இருக்க அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் 1.20 கோடி ரூபாயை பிரியங்காவுக்கு ஜோஸ் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஜோஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. பிரியங்காவை கைது செய்ய சென்ற போதும் அவர் இல்லை.
இதனால் இருவரையும் தேட தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் நேபாளத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. ஆலப்புழா போலீசார் நேபாளம் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
தன்னுடைய மனைவியின் சம்பளத்தில் இருந்து, 1.20 கோடி ரூபாயை காதலிக்கு தந்த சம்பவம், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

