மாஸ்க் அணியாததால் ரூ.2 லட்சம் அபராதம்!!
மாஸ்க் அணியாததால் ரூ.2 லட்சம் அபராதம்!!

மாஸ்க் அணியாததால் இங்கிலாந்தில் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஓ’டூல் என்ற நபர், சில பொருட்களை வாங்குவதற்காக முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார். கடைக்குள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், சில விநாடிகளுக்கு தனது மாஸ்க்கை கழட்டி, மாட்ட நினைத்துள்ளார்.
வெறும் 16 விநாடிக்கு தனது மாஸ்க்கை கழட்டி, சத்தமில்லாமல் மீண்டும் பழைய நிலைக்கு மாட்டிக்கொண்டுள்ளார். கிறிஸ்டோபரின் போதாத நேரம், அந்த சமயத்தில் கடைக்குள் நுழைந்த போலீசார் அவர் மாஸ்க் இல்லாமல் இருப்பதை பார்த்துவிட்டனர்.

தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சில விநாடிகள் மட்டுமே மாஸ்கை கழட்டியதாக கிறிஸ்டோபர் தனது நிலையை விளக்கியுள்ளார். ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத போலீசார், அவர் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஏதோ சாக்கு, போக்கு சொல்வதாக நினைத்துள்ளனர்.
சில நாட்கள் கழித்து குற்றப் பதிவு அலுவலகத்திலிருந்து கிறிஸ்டோபருக்கு 100 டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்டு ஒரு கடிதம் வந்துள்ளது. அதனை ஏற்க மறுத்த கிறிஸ்டோபர் தான் எந்த தவறும் செய்யவில்லை என விளக்கி மெயில் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் அபராதத்தை ரத்து செய்துவிடுவார்கள் என காத்திருந்த கிறிஸ்டோபருக்கு மற்றொரு கடிதம் வந்துள்ளது. அதில் 16 விநாடிகள் மாஸ்க் அணியாததற்காக 2 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி கடிதம் வந்துள்ளது.
newstm.in

