வைகையில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு..!
வைகையில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு..!

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று, திரும்பும் வேளையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளார்.

