ரூ.520 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி!!
ரூ.520 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி!!

சேலம் மாவட்டத்தில் பொது நகைக்கடன் பெற்ற 1,51,489 பயனாளிகளுக்கு ரூ 520.07 கோடி மதிப்பிலான பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.09.2021 அன்று விதி எண் 110 ன் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 40 கிராமுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
மேலும் , பொது நகைக்கடன் தள்ளுபடிக்கான பயனாளிகளின் பட்டியலை அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்களைக் கொண்டு தணிக்கை மேற்கொண்டு பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது .
ஆய்வுக்குப்பின் சேலம் மாவட்டத்தில் 1,51489 நபர்களின் ரூ .520.07 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறும் நகைக்கடன்களாக அறிவிக்கப்பட்டது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 8,907 நபர்களுக்கான ரூ 40.10 கோடி கடனும் , 8 நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் 12,523 நபர்களுக்கு ரூ 40.98 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது.

203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 1,09,808 நபர்களுக்கு ரூ. 378,99 கோடி கடனும் , 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 8,009 நபர்களுக்கு ரூ 22.59 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது.
20 பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 4,251 நபர்களுக்கு ரூ. 11.58 கோடி கடனும் , 6 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் 1,747 நபர்களுக்கு ரூ. 6.51 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மொத்தம் சேலம் மாவட்டத்தில் உள்ள 252 கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களின் மூலம் பொது நகைக்கடன் பெற்ற 1,51,489 பயனாளிகளுக்கு ரூ 520.07 கோடி மதிப்பிலான பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களின் மூலம் பொது நகைக்கடன் பெற்ற 61 பயனாளிகளுக்கு ரூ 23.45 இலட்சத்திற்கான தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் நகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
newstm.in

