மூன்று மின் விளக்குகளுக்கு ரூ.25000.. மூதாட்டிக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்..!
மூன்று மின் விளக்குகளுக்கு ரூ.25000.. மூதாட்டிக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள எருமாடு ஆழிஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி (78). இவருடைய செல்போனுக்கு மின் வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில், கடந்த 2 மாதம் மின்சாரம் பயன்படுத்தியதற்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
‘மூன்று மின் விளக்குகள் மட்டுமே உள்ள வீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமா..?’ என அதிர்ச்சி அடைந்த தேவகி, இது குறித்து உள்ளூர் மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டுள்ளார்.
அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி 25,071 ரூபாயை கட்டணமாக செலுத்தியிருக்கிறார். இதையடுத்து, மின் வாரிய உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து கூடலூர், பந்தலூர் மின்வாரிய செயற் பொறியாளர்கள் தேவகியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மின்வாரிய ஊழியரின் பொறுப்பின்மை காரணமாக இந்த குளறுபடி நடந்திருப்பதை உறுதி செய்தனர்.
இந்த குளறுபடிக்கு காரணமான மின் கணக்கீட்டாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ததோடு, தேவகி செலுத்திய மின் கட்டணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

