ரம்மி மோகம்… கொள்ளையனாக மாறிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்!!
ரம்மி மோகம்… கொள்ளையனாக மாறிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்!!

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் வயதான பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது.இதையடுத்து எழும்பூர் ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருவான்மியூர், பெருக்குடி, வேளச்சேரி உள்பட பறக்கும் ரயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது பெருங்குடி பறக்கும் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணிடம் ஒருவர் நகையை பறித்து ஓடினார். தனிப்படை போலீசார் அந்த நபரை துரத்தி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பது தெரிந்தது. மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அவர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கைதான ஜெயராமன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர். ஆன்லைன் ரம்மி மீண்டும் மீண்டும் விளையாட பணம் இல்லாததால் பறக்கும் ரயில் நிலையங்களில் வயதான பெண்களை குறிவைத்து தங்க நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது.
ஒரு நாளைக்கு ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 ஆயிரம் வரை இழந்து வந்துள்ளார். கைதான ஜெயராமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்.
newstm.in

