அதிர்ச்சி! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!
அதிர்ச்சி! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. இரண்டாம் அலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என மத்திய மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை பெரிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் நான்காவது அலை வருகிற ஜூன் மாதம் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 214 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,965ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,985 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
newstm.in

